Published On Nov 30, 2023
நம் கோபம் எதிராளியை மாற்றாது.
அவனுக்கு நம்மிடத்தில் கோபத்தை உண்டாக்குவதுதான் அதன் பலன்.
இரண்டு பக்கங்களிலும் துவேஷம் வளர்ந்துக் கொண்டே போகும். ஒருவன் தன் தப்பைத தானே உணர்ந்து திருந்தச் செய்யாமல், நம் கோபத்துக்குப் பயந்து நடந்து காட்டுவதில், நமக்குப் பெருமையில்லை.
இது நிலைத்தும் நிற்காது. அன்பினாலேயே பிறரை மாற்றுவதுதான் நமக்குப் பெருமை; அதுதான் நிலைத்து நிற்கும்.
ஒருத்தன் பாவம் செய்ய அவனுடைய மனச சந்தர்ப்பம் இரண்டும் காரணமாகின்றன.
நாம் பல பாவங்களைச் செய்யாமல் சந்தர்ப்பங்களே நம்மைக் கட்டிப் போட்டிருக்கலாம்.
எனவே ஒரு பாவியைப் பார்க்கும் போது, அம்பிகே! இந்தப் பாவத்தை நானும் கூட செய்திருக்கலாம். ஆனால், அந்தச் சந்தர்ப்பம் தராமல் நீ கிருபை செய்தாய். அந்தக் கிருபையை இவனுக்கும் செய்யம்மா' என்று பிரார்த்திக்க வேண்டும்.
இரண்டாவதாக நம்மை ஒருத்தர் துவேஷிக்கிறார் என்றும் கோபம் கொள்ள வேண்டியதில்லை.
நாம் எத்தனை தூஷணைக்குத தக்கவர் என்பது நம் உள்மனசுக்குத தெரியும்.
ஒரு வேளை நம்மைத் தூஷிக்கிறவர் நாம் செய்யாத தவறுக்காக நம்மைத் திட்டிக் கொண்டிருக்கலாம்.
ஆனால் நாம் செய்த தவறுகள் அதைவிடப் பெரியவை என்று நம் அந்தரங்கத்திற்குத் தெரியும்.
நம் தவறுகளைக் கழுவிக்கொள்வதற்காக, ஒவ்வொரு நாளும், அம்பாளிடம் பச்சாதாபத்துடன்
அழ வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம்.
இந்த நிலையில் உள்ள நாம் பிறரைத் தப்புக் கண்டுபிடித்துக் கோபிக்க நியாயம் ஏது?
நாம் தப்பே செய்யவில்லை என்றால், அப்போது பிறரைக் கோபிக்கலாமா என்றால், இப்படித் தப்பே பண்ணாத நிலையில் நாம் அன்புமயமாகி விடுவோம்.
அப்போது நமக்குப் பாவியிடமும் கருணை தவிர வேறு எந்தப் பாவனையும் இராது; கோபமே உண்டாகாது. நாம் தப்புச் செய்தவர்கள் என்றாலோ, நமக்குப் பிறரைக் கோபிக்க யோக்கியதை இல்லை.
தப்பே பண்ணாத நிலையிலோ, எல்லாம் அம்பாள் லீலைதான் என்று தெரிகிறது. லீலையில் யாரைப் பூஜிப்பது, யாரைத் தூஷிப்பது? எப்படிப் பார்த்தாலும் கோபம் கூடாதுதான்.
மனிதனைப் பாவத்தில் அழுத்துகிற இரண்டு பெரும் சக்திகள், காமமும் குரோதமுமே' என்கிறார் கிருஷ்ண பரமாத்மா.
அதாவது நம் கோபத்தினால் நமக்கே தான் தீங்கு செய்து கொள்கிறோம். பெரும்பாலும், நம்முடைய கோபத்தை எதிராளி பொருட்படுத்துவதே கிடையாது.
ஆத்திரப்படுவதால, நாமே நம் மனசு சரீரம் இரண்டையும் கெடுத்துக் கொள்வதோடு சரி.
அன்பாக இருப்பதுதான் மனிதனின் ஸ்வபாவமான தர்மம். அதுதான் ஆனந்தமும்.
அன்பு நமக்கும் ஆனந்தம் எதிராளிக்கும் ஆனந்தம். ”அன்பே சிவம்” என்பார்கள்.
நாம் எல்லாரும் அன்பே சிவமாக அமர்ந்திருக்கப் பிரயாசைப்பட வேண்டும்.
*கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் .
கோபித்தால் இடைவெளி அதிகமாகும்.
சண்டை போடும்போது சத்தமாக பேசுவது ஏன்?
ஒரு துறவி கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறும் சமயம், அவ்விடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அதைப் பார்த்த துறவி, தன் சீடர்களிடம் திரும்பி சிரித்துக்கொண்டே கேட்கிறார்? ஏன் மனிதர்கள் கோபத்தில் இருக்கும் போது ஒருவரை ஒருவர் பார்த்து சத்தம்போட்டு சண்டை பிடிக்கிறார்கள்?
சீடர்கள் சில நிமிடங்கள் சிந்திக்கிறார்கள்.
பின்னர். சீடர்களில் ஒருவர் கோபத்தில் நாம் அமைதியை இழக்கிறோம்! அதனால் சத்தமிடுகிறோம்!
துறவி ஆனால், உனக்கு மிக சமீபத்தில் இருக்கும் நபரிடம், ஏன் சத்தமிடுகிறாய்? அவர்கள் உன்னருகில்தானே நிற்கிறார் கள்! நீ சொல்ல வேண்டியதை அவர் களுக்கு மட்டும் கேட்கும் விதமாக எடுத்துரைக்கலாமே!
ஒவ்வொரு சீடரும் ஒரு காரணம் சொல்கிறார். ஆனால் எந்த காரணத்திலும் அடுத்தவர்களுக்கு உடன்பாடில்லை!
கடைசியாக துறவி பதில் கூறுகிறார்.
எப்பொழுது இரு மனிதர்கள், ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது அவர்களின் மனது இரண்டும் வெகு தொலைவுக்குச் சென்றுவிடுகிறது! எனவே தூரத்தில் இருக்கும் மனதுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே, சத்தமிடுகிறார்கள்! மனது எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ, அவ்வளவு தூரம் இவர்கள் தங்கள் ஆற்றலை உபயோகித்து சத்தம்போட வேண்டியிருக்கும்! அப்பொழுது தானே தங்கள் கருத்து வெகு தொலைவில் இருக்கும் மனதைச் சென்றடையும்!
ஆனால் இதுவே, இரு மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருக்கும்போது என்ன நடக்கிறது? அவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சத்தமிடுவதில்லை! அமைதியாகவும், அன்பான முறையிலும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்து வார்கள்! காரணம் அவர்களின் மனது இரண்டும் வெகு சமீபத்திலே இருக்கும்! மனதிற்கு இடையேயான தூரம், மிகக் குறைவாக இருக்கும் அல்லது மனதிரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கும்!
துறவி தொடர்ந்து கூறுகிறார்.
இதைவிடவும் அதிகமாக ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும்போது என்ன நடக்கும்? அவர்கள் ஒருவருக்கொருவர் சத்தமாக பேச தேவையிருக்காது! அவர்களின் மனதுகள் இரண்டும் கிசுகிசுப்பாக பேசுவதில் இருந்தே, அவர்களின் கருத்துகள் பரிமாறப்படும்! இன்னும் இன்னும் அன்பு அதிகமாகும்போது வார்த்தையே தேவைப்படாது! அவர்கள் கண்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போதே, மனதின் எண்ணங்கள் வெளிப்பட்டுவிடும்!
துறவி கடைசியாக சீடர்களைப் பார்த்து கூறுகிறார்.
அதனால் நீங்கள் ஒருவருடன் ஒருவர் வாதிடும்போது, உங்கள் மனதுகள் இரண்டும் தொலைவாகப் போய்விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் மனதின் தொலைவை அதிகப்படுத்தும் வார்த்தைகளை உபயோகப் படுத்தாதீர்கள்.
அப்படி செய்யாமல் போனால், "ஒருநாள் உங்கள் மனங்களிரண்டின் தூரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, கடைசியில் ஒன்றுசேரும் பாதையே அடைக்கப்பட்டுவிடும் நிலை வந்துவிடும்...
#அர்த்தமுள்ள #இந்துமதம்
#பத்து #பாகங்கள்
#நூலாசிரியர்
#கவிஞர் #கண்ணதாசன்
#நூல் #ஆன்மீகம்
#மொழி #தமிழ்
#அர்த்தமுள்ள_இந்துமதம்
#பாகம்
#எனக்கு_தெரிந்தவரை